இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெயபிரதா. கடந்த 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமாஜவாதி கட்சியில் இணைந்தார். மேலும் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். ஆனால், கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி கடந்த 2010-ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய செயலர் பூபேந்தர் யாதவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி ஆகியோர் முன்னிலையில் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா பாஜக-வில் தன்னை செவ்வாய்கிழமை இணைத்துக்கொண்டார்.