ஹைதராபாத்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரால் ரூ. 2 மோசடி செய்துள்ளதாக, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹைதாராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் விபரம் வருமாறு:
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பார்மா எக்சில் என்ற நிறுவனத்தின் தலைவராக எனது கணவரை நியமனம் செய்வதற்காக, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவை அனுகினேன்.
அதை செய்து தருவதாகக் கூறி என்னிடம் இருந்து தவணைகளில் ரூ 2.17 கோடி பணம் பெற்றார். அத்துடன் இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்ட பரிந்துரை கடிதத்தினையும் காண்பித்து, அரசு பணி வாங்கி தருவதாக நம்பிக்கையூட்டினார்.
ஆனால் சொன்னபடி பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், பணமும் திருப்பி தரப்படவில்லை. இதனைக் கேட்டபோது முரளிதர ராவ் உள்ளிட்டோர் என்னை மிரட்டத் தொடங்கினர்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முறையாக வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் பின்னர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையின் பேரில் அந்த பெண்ணின் புகாரின் மீது மோசடி, குற்ற வழக்கு மற்றும் ஐ.பி.சி.யின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை முரளிதர ராவ் உறுதியாக மறுத்துள்ளார்.