புது தில்லி: பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், உலக நாடக தினத்தை முன்னிட்டு மோடிக்கு வாழ்த்துகள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இன்று காலை, பிரதமர் மோடி டிவிட்டர் வாயிலாக, இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் மிகவும் முக்கியமானதொரு செய்தியோடு உரையாடப் போவதாக அறிவித்திருந்தார்.
இது நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2016 நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது போல ஏதேனும் அதிரடி அறிவிப்பாக இருக்குமோ அல்லது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதாகக் கூறுவது போல வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதற்கான அறிவிப்பாக இருக்குமோ என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த நிலையில் சரியாக 12 மணியளவில் உரையாடத் தொடங்கிய மோடி, விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையைப் படைத்திருப்பதாகவும், விண்ணில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த உரையை அடுத்து ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக வீரர்களுக்கு வாழ்த்துகள். உங்களது சிறந்த பணியால் நாடே பெருமையடைகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று உலக நாடக தினம் என்பதால், இதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்க நான் பெரிதும் விரும்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.