அருணாசலப் பிரதேசத்தை இந்திய மாநிலமாகவும், தைவானை தனி நாடாகவும் குறிப்பிட்டிருந்த 30,000 உலக வரைபடங்களை, சீன சுங்கத்துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தை, தங்கள் நாட்டின் பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்திய அரசியல் தலைவர்கள் அங்குச் செல்லும்போதெல்லாம், அதற்குக் கண்டனம் தெரிவிப்பதை சீனா வழக்கமாக வைத்துள்ளது.
அதே வேளையில், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதைப் போலவே, அருணாசலுக்கும் அரசியல் தலைவர்கள் சென்று வருகின்றனர் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை விவகாரம் குறித்து, இதுவரை 21 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.
அதேபோல், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தீவான தைவானையும், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசலையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாகக் குறிப்பிடாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 30,000 உலக வரைபடங்களை சீன சுங்கத் துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இது தொடர்பாக, சீன செய்தி நிறுவனம் ஒன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தைவானை தனி நாடாகவும், இந்திய-சீன எல்லையைத் தவறாகவும் குறிப்பிட்டிருந்த சுமார் 30,000 உலக வரைபடங்களை குயிங்டாவோ மாகாண சுங்க அதிகாரிகள் அழித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சீன வெளியுறவுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லியூ வென்சாங் கூறுகையில், இந்த விவகாரத்தில், சீன அதிகாரிகள் செய்தது சரியே.
இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் ஒரு நாட்டுக்கு இன்றியமையாதவை. தைவானும், தெற்கு திபெத்தும் (அருணாலப் பிரதேசம்) சீனாவைச் சேர்ந்த பகுதிகளே. இந்த விவகாரத்தில், சர்வதேச விதிகளை எந்த நாடும் மீற முடியாது என்றார்.