அறிமுகம் செய்தது முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.21,163 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.54,733 கோடி (இறக்குமதி வரி ரூ.23,289 உட்பட) மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.9,168 கோடி (இறக்குமதி வரி ரூ.1,053 உட்பட) வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தில் விற்பனை கணக்கு விபரங்களை சமர்ப்பித்தோரின் மொத்த எண்ணிக்கை ஏப்ரல் 30, 2019 நிலவரப்படி 72.13 லட்சமாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது தான் அதிகளவிலான வரி வசூலாகி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அதிலும் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,03,459 கோடியாகும். இது இந்த ஒரு ஆண்டில் மட்டும் 10.05 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.