குடியுரிமை விவகாரத்தை குறிப்பிட்டு, தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து அண்மையில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன்மூலம், இந்த விஷயத்தில் உண்மையான நிலவரம் என்ன என்பதை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க ராகுல் காந்திக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு தடை விதிக்கக் கோரி ஜெய் பகவான் கோயல் மற்றும் சி பி தியாகி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரது அமர்வு முன் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.