பாலாகோட் பதிலடி தாக்குதலின் போது தங்கள் உறவினர்களை பறிகொடுத்தது போன்று காங்கிரஸ் தலைவர் ராகுலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் கதறி துடித்ததாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார். இதுதொடர்பாக தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
புல்வாமா தாக்குதல் நடந்த 13-ஆவது நாளில் அதற்கு தக்க பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்தார். அப்போது பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.
ஆனால், இந்த தாக்குதலுக்காக வருந்திய இரு இடங்கள் நம்நாட்டில் தான் உள்ளது. ஒன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் அலுவலகம் மற்றொன்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அலுவலகம் மட்டும் தான். இந்த பதிலடி தாக்குதலுக்காக ராகுலும், கேஜரிவாலும் கதறி துடித்தனர். ஒருவேளை அதில் உயிரிழந்த பயங்கரவாதிகள் இவர்களின் உறவினர்களாக இருக்கக்கூடும்.
ராகுலும், கேஜரிவாலும் இந்நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளனர். அதிலும் ராகுல் ஒருபடி மேல் சென்று பாதுகாப்பு தொடர்பான பாஜக சட்டங்களை தளர்த்துவேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை பாகிஸ்தான் உளவாளிகள் இங்கு செயல்படும்போது என்ன செய்வார் என்பதை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்.
இது பாஜக-வின் அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு. பாகிஸ்தான் நம்மை தாக்க நினைத்தால் நிச்சயம் பதிலடி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.