மோடியின் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் அலுவலகத்தை பயன்படுத்துவதா?: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் அலுவலகம் பயன்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் அலுவலகம் பயன்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு புதன்கிழமை நேரில் சென்று இது தொடர்பான புகார் கடிதத்தை அளித்தது. பின்னர், செய்தியாளர்களிடம் சிங்வி கூறியதாவது:
பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகத்தை தனது தேர்தல் பிரசாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி வருவது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். மோடி பிரசாரம் செய்யும் மாவட்டங்களின் கலாசார பின்னணி உள்ளிட்ட விவரங்களை நீதி ஆயோக் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் பிரதமர் அலுவலகம் பெற்று வருகிறது. இந்த விவரங்கள் மோடியின் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது அரசு இயந்திரத்தை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் செயலாகும். மேலும், இது அப்பட்டமான தேர்தல் நடத்தை நெறிமுறை மீறலும் கூட. எனவே, இது தொடர்பாக மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளோம். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது இதே போன்ற புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் வரும் 6-ஆம் தேதி மோடி நடத்த திட்டமிட்டுள்ள பேரணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். சாகரில் நடைபெறும் இந்தப் பேரணி, அருகில் உள்ள தாமா மக்களவைத் தொகுதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மே 6-ஆம் தேதி 5-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மறைமுகமாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நடைபெறும் தினத்தில் சாகரில் பிரதமர் மோடி பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றார் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com