இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தொடர்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் விரும்புகிறார் ? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் ப. சிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தவுடன், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை மூலம் அறிவிக்க செய்யும் நடவடிக்கையை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுதான் தொடங்கியது. அந்த முயற்சி, 2019ம் ஆண்டில் வெற்றிகரமாக முடிந்திருப்பதை காண்கையில் மகிழ்ச்சியளிக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வர வேண்டும் என்று விரும்புவது ஏன்? என்று சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. மூலம் அறிவிக்கச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. நீண்டகாலம் நடைபெற்ற முயற்சியின் பயனாக, அவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. புதன்கிழமை அறிவித்தது
குறிப்பிடத்தக்கது.