ஒடிஸாவில் பானி புயல் வெள்ளிக்கிழமை தாக்கிய நேரத்தில், புவனேசுவரத்திலுள்ள ரயில்வே மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், மஞ்சேஸ்வர் பகுதியிலுள்ள ரயில்வே புழுதுபார்ப்பு மையத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் 32 வயது பெண் ஊழியர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு, ரயில்வே மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்தபோது, மருத்துவமனை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்துகொண்டிருந்தது. புயலால் மருத்துவமனை கட்டடத்துக்கும் சேதங்கள் ஏற்பட்டன. பானி என குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையும் தாயும் தற்போது நலமாக உள்ளனர் என்றனர்.