ஜார்க்கண்ட் மாநிலம் சிராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பை நடத்தினர். இதில், அக்கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. எனினும், உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது: கர்ஸ்வான் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு, வெள்ளிக்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகள் 4 பேர் வந்தனர். அலுவலகத்துக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை வெளியே விரட்டிய அவர்கள், வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டு தப்பினர். இதில் அந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் கூறினர்.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு கடந்த 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.