விவசாயிகளுக்கு பெப்சிகோ நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பெப்சிகோ இந்தியா நிறுவனம் அறிவித்ததையடுத்து, விவசாயிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து துன்புறுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனமான பெப்சிகோ, பல்வேறு தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பிரபல தின்பண்டமான லேஸ் சிப்ஸ் தயாரிக்க, பிரத்யேக உருளைக்கிழங்கு விதைக்கு அந்நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்த பிரத்யேக விதை வகையை விதைத்து உற்பத்தியில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த 9 விவசாயிகளுக்கு எதிராக பெப்சிகோ இந்தியா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. அதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பெப்சிகோ நிறுவனம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், விதைகளின் உரிமை விவசாயிகளிடம் இருக்கும் வகையில் தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் கபில் ஷா கூறியதாவது:
உரிமம் பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது அல்லது நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இரு நிபந்தனைகளுடன் வழக்கை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் முன்னர் பெப்சிகோ நிறுவனம் தெரிவித்தது.
வழக்கை திரும்பப் பெறுவதற்கு எவ்விதமான நிபந்தனையும் விதிக்கக் கூடாது. வழக்குப் பதிவு செய்வது விவசாயிகளை துன்புறுத்தியதற்காக, அவர்களுக்கு உரிய இழப்பீடை நிறுவனம் வழங்க வேண்டும். விதைகளுக்கான உரிமை விவசாயிகளிடம் உள்ளது என்று சட்டமே கூறுகிறது.
விவசாயிகளின் விதை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.