இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட 53 சதவீத திடக்கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தகவலறியும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், இந்தியா முழுவதும் 1.45 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில், 53 சதவீத திடக்கழிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினமான வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதிக்குள், சேகரிக்கப்படும் 100 சதவீத திடக்கழிவுகளை அழிக்க திட்டமிட்டுள்ளோம்.
மாநிலங்களைப் பொருத்தவரை, சத்தீஸ்கர் 84 சதவீத திடக்கழிவுகளை அழித்து முன்னணியில் இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக குஜராத்தும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் வகிக்கின்றன.
மிஸோரம் மாநிலமும், மேற்கு வங்கமும் முறையே 4 மற்றும் 5 சதவீத திடக் கழிவுகளை மட்டுமே அழித்து கடைசி இடங்களை வகிக்கின்றன என்று அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.