மேற்கு வங்கத்தில் பானி புயல் பாதிப்புகள், நிவாரணப் பணிகள் தொடர்பாக பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இருமுறை தொடர்பு கொண்டார். ஆனால், இருமுறையும் அவர் பிரதமரிடம் பேசவில்லை. பிரதமரை தொலைபேசியில் மீண்டும் அழைக்கவும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிஸா, ஆந்திரம் மற்றும் மேற்கு வங்கத்தை பானி புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் அந்த 3 மாநிலங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை மற்றொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த அக்கறையும் காட்டவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அவர் பேசவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அதில், மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக பேசுவதற்காக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி சனிக்கிழமை இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
ஆனால், இருமுறையும் அவருடன் பேச முடியவில்லை. பிரதமரின் தொலைபேசி அழைப்பு வந்தது தெரிந்தும், மம்தா பானர்ஜி மீண்டும் அழைக்கவில்லை. இதையடுத்து, மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியை தொடர்பு கொண்டு பிரதமர் பேசினார். அப்போது, புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து அவருடன் பிரதமர் ஆலோசித்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.