"இந்தியாவின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி' என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: "ஊழலில் முதன்மையானவர் ராஜீவ் காந்தி' என்று பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி ஊழலிடம் முதலிடம் பிடித்தவர் மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராகவும் விளங்கியவர்.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கும்பல் தாக்குதல் நடத்திய உலகின் ஒரே பிரதமர் ராஜீவ் காந்திதான். சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அவர் ஊக்குவித்தது மட்டுமன்றி, அதில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கவும் செய்தார்; அவர்களுக்கு சன்மானங்களையும் வழங்கினார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் தெரிவிக்கவில்லை? அந்த கலவர சம்பவத்துக்கு காங்கிரஸ் ஏன் பொறுப்பேற்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா குறிப்பிட்டுள்ளார்.