ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்தியாவின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் மாவட்டம் மங்கோட் மற்றும் கிருஷ்ணா காட்டி போன்ற சர்வதேச எல்லைக்கோட்டையொட்டி இந்திய எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 25 வயது ராணுவ வீரர் காயமடைந்தார். மேலும், ரஜெளரி மாவட்டம் கேரி பகுதியில் நடைபெற்ற தாக்குதலிலும் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் 513 முறை இந்திய பகுதிகளை குறி வைத்து, அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் திருப்பித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.