தெலங்கானாவில் இருதரப்பினருக்கிடையே கலவரம் நிகழ்ந்த இடத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தெலங்கானாவின் அம்பேர்பேட் பகுதியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த கோயிலை சாலை நீட்டிப்புப் பணிகளுக்காக பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் கடந்த புதன்கிழமை இடித்தது.
இதையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கலவரம் மூண்டது. இதில், இருதரப்பினரும் கற்களைவீசி தாக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், மிகுந்த சிரமத்துக்குப் பின் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
இந்தக் கலவரத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்களில் 8 பேரும், காவல் துறையினர் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் கலவரம் தொடர்பாகக் காவல் துறையினர் கூறுகையில், அம்பேர்பேட் பகுதியில் நிலைமை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ ராஜா சிங் லோத் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
ஆனால், கலவரம் குறித்து ஆய்வு நடத்த வந்த ராஜா சிங் லோதை காவல் துறையினர் அத்துமீறி கைது செய்துள்ளதாக பாஜக தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர்.