முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழலில் முதன்மையானவர் என்று பிரதமர் மோடி பேசியதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஊழலில் முதன்மையானவர் என்றே முடிவுற்றது" என்றார்.
ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இதற்கு தனது டிவிட்டர் பதிவில் பதிலடி தந்தார். மேலும், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மேலும் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்யாமல், அதை நிராகரிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் சுஷ்மிதா தேவ் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுடன் கூடுதல் பிரமாணப் பத்திரத்தையும் இணைத்து தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுஷ்மிதா தேவ் தனது கூடுதல் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், இதேபோன்ற (ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி) பேச்சுகளுக்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மாயாவதி மற்றும் ஆஸம் கான் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.