அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உயரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் புதன்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசிதாவது:
குடிசைகளில் வாழ்ந்து வந்த 1.3 கோடி பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் தரமான வீட்டு வசதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 7.5 கோடி குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நாட்டில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். மக்கள் நலனை முழுமையாக மனதில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளே இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 13 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை,எளிய இல்லத்தரசிகளின் சமையலறைப் பிரச்னையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் நமது குடும்பப் பெண்களின் உடல்நலனும் பாதுகாக்கப்படும். அடுப்பில் விறகு, கரியை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.
கடந்த ஆண்டில் ஒரு நாளுக்கு 5 முதல் 6 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டு வந்தது. இப்போது நாள்தோறும் 30 முதல் 32 கி.மீ.தொலைவுக்கு சாலை அமைக்கப்படுகிறது என்றார் அவர்.
உலகின் 7-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி 6-ஆவது இடத்துக்கு முன்னேறியது. விரைவில் 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது, உலக அளவில் பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. நான்காவது இடத்தில் ஜெர்மனி உள்ளது.