சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறை புதிய புகார் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, ஜாகீர் நாயக் மீது அமலாக்கத் துறையும் தனியாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மதபோதனை செய்து வருகிறார்; வேலை அல்லது வணிகம் மூலம் அவர்
ஊதியம் பெறுவதற்கான ஆதாரம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தனது பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்கு ரூ.49.20 கோடி
அனுப்பியுள்ளார். இதேபோல், ஜாகீர் நாயக்காலும், அவரது இயக்குநர்களாலும் கட்டுப்படுத்தப்படும் ஹார்மோனி மீடியா நிறுவனத்தின் வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பியுள்ளார். இந்த தொகையின் மூலம், புணே, மும்பை ஆகிய நகரங்களில் தனது நெருங்கிய உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கியுள்ளார்.
சென்னையில் பள்ளி கட்டடத்தை கட்டி வருகிறார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி பதிவு செய்து கொண்டார்.
இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்ததும், மலேசியாவிலேயே ஜாகீர் நாயக் தங்கி விட்டார்.
இந்தியாவுக்கு அவர் திரும்பி வரவில்லை.