மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டும் நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார்.
வட கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித்தை ஆதரித்து பரம்புரி புலியா, ஜீரோ புஸ்தா ஆகிய பகுதிகளில் பிரியங்கா புதன்கிழமை மாலையில் பிரசாரம் செய்தார். மேலும், தெற்கு தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜேந்தர் சிங்கை ஆதரித்து வீராட் சினிமா, மஹரிஷி வால்மீகி மார்க், தட்சிண புரி ஆகிய பகுதிகளில் மாலை 6.30 மணியளவில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
அனைத்து நிலைகளிலும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அக்கட்சி தவித்து வருகிறது.
இதனால், நாடு சிக்கலான காலக்கட்டத்தைச் சந்தித்துள்ளது. நாடு விடுதலையடைந்த பிறகு, முதன் முறையாக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை
எதிர்நோக்கியுள்ளனர். இத்தகைய மிகப்பெரிய மாற்றத்தையும், மாற்று அரசியலையும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வழங்க முடியும்.
தில்லி மக்களை புரிந்துகொள்ளாத ஆட்சியாளர்கள் தில்லிக்கு என்ன நன்மையை செய்திட முடியும்? தில்லியில் பிறந்து, வளர்ந்தவள் என்ற முறையில் தலைநகரை முற்றிலுமாக அறிந்தவள் நான்.
தில்லியின் பிரச்னைகளையும், மக்கள் அடைந்துள்ள வேதனைகளையும், வாழ்வாதாரத்துக்கான அன்றாட போராட்டத்தையும் அறிவேன். மத்திய அரசு
மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டும் நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் ஆகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டியிட்டுவந்த இந்தியா, தற்போது வளரும் நாடாக அறியப்படும் நிலை உருவாகியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகள்
மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் தீவிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான கேள்விகளுக்கு மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
மோடி அரசால் படை வீரர்களை பாதுகாக்க முடியவில்லை. வடகிழக்கு தில்லியில் அடிப்படை பிரச்னையாக உள்ள சுகாதாரத்துக்கு தீர்வு காணப்படவில்லை என்றார் பிரியங்கா காந்தி.