இந்தியாவில் கோடை வெப்பத்துக்கு நிகராக மக்களவைத் தேர்தலும், அதன் பிரசாரங்களும் சூடு கிளப்பி வருகின்றன.
இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியைப் பற்றியோ, தலைவரைப் பற்றியோ வெளியாகும் சின்னச் சின்ன செய்திகள் கூட பூதாகரமாக்கப்படுகிறது. நல்ல செய்தியாக இருந்தால் அந்த கட்சியால், கெட்ட செய்தியாக இருந்தால் எதிர்க்கட்சியால் அது வைரலாகப் பரப்பப்படுகிறது. ஆனால், இதெல்லாம் இந்தியாவில் நடக்கும் அரசியல் பாசாங்குகள்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியாக உள்ள மே 20ம் தேதியிட்ட டைம் இதழின் அட்டைப் படத்தில் காவித் துண்டுடன் பிரதமர் நரேந்திர மோடியின் மிக அழுத்தமான ஓவியம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன் முகப்பில் 'India's Divider in Chief' என்று சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை இந்த அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.
அந்த டைம் இதழில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமரிசித்து தலையங்கமும் எழுதப்பட்டுள்ளது. இந்த தலையகங்கத்தை எழுதியிருக்கும் ஆதிஷ் தஸீர் என்ற ஆசிரியரின் பேனா, 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளும் மோடியின் ஆட்சியை சகித்துக் கொள்ளுமா?' என்று துணைத் தலைப்பையும் இட்டுள்ளது.
அதோடு நிற்காமல், இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ஜவகர்லால் நேருவின் மதசார்பற்றகொள்கை இந்தியாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்கியதையும், இந்து - முஸ்லிம் மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவத்தை மோடியின் கொள்கைகள் தரைமட்டமாக்கியதையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது.
குஜராத் வன்முறையின் மூலம் மக்களின் உயிர்களைப் பணையமாக்கி அரசியல் லாபம் அடைந்ததையும் இந்த தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை படிக்கத் தவற முடியவில்லை.
பிரதமர் மோடியின் இந்து சார்புக் கொள்கையின் மூலம் இந்து - முஸ்லிம் மக்களிடையே இருந்த நல்லுறவு எவ்வாறெல்லாம் சீரழிந்தது என்பதை தலையங்கம் முழுக்க விவரித்துள்ளது.
டைம் இதழில் மோடிக்கு எதிராக தலையங்கம் வெளியாகியிருப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2012ம் ஆண்டு நரேந்திர மோடி குறித்து மிகக் கடுமையான விமரிசனங்களோடு கட்டுரை வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.