தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் இருந்த போது இளைஞர் ஒருவரை அவரை கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், சுரேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் கேஜ்ரிவாலை ஏன் அடித்தார் என்பது குறித்து அவரே விளக்குகிறார்.
அதாவது, நான் ஏன் அப்படி செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வரையே அடித்தது மிகப்பெரிய தவறு. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. இவ்வாறு செய்யுமாறு என்னை யாரும் தூண்டவும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. காவல்துறையினர் எனக்கு எந்த துன்புறுத்தலும் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வரை அடித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தினார்கள். நான் செய்த செயலுக்கு வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள்தான் அவ்வப்போது திருவள்ளூவர் சொன்னதையும் மீறி நாவை அடக்காமல் எதையாவது பேசிவிட்டு அது சர்ச்சையானதும் மன்னிப்புக் கேட்பார்கள்.
இதைப் பார்க்கும்போது அரசியல் தலைவர்களை வைத்தும் பொதுமக்கள் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.