பிரதமர் மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்திய ஜனநாயகம் அவரது கன்னத்தில் அறையும் என்றுதான் கூறினேன் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி இது தொடர்பாகப் பேசுகையில், என்னைக் கன்னத்தில் அறையப்போவதாக மம்தா பானர்ஜி பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் கூட எனக்கு ஆசிர்வாதமாகவே அமையும். அவரை நான் சகோதரியாகவே மதிக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து தனது பேச்சு குறித்து மம்தா சிமுலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் விளக்கமளித்தார். அப்போது, நான் அவரைக் கன்னத்தில் அறைவதாகப் பேசியதாக மோடி கூறியுள்ளார். எனது கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அவர் இவ்வாறு பேசியுள்ளார். உண்மையில், இந்திய ஜனநாயகம் மோடியை அறையும் என்றுதான் நான் பேசினேன். நான் அவரை அறையப் போவதாகப் பேசவில்லை.
மேலும், நான் ஏன் அவரைத் தாக்க வேண்டும்? நான் அப்படிப்பட்ட நபரும் அல்ல. பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் வாயிலாக அவருக்கு அடி விழும் என்ற கருத்தை முன்வைத்துதான் நான் பேசினேன். நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மக்களவைத் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.