பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். ஜல் விஹார், காமாட்சி மந்திர், மலை மந்திர், மோதி நகர் சாஸ்திரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பிரதமராக மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் அவர் எடுத்துரைத்தார். ஜல் விஹாரில் மக்களிடையே அவர் பேசியதாவது: ஏழை மக்களை மனதில் வைத்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்.
அவர்கள், இம்முறை மோடியையே ஆதரிப்பர். இந்த நலத் திட்டங்கள் தொடர வேண்டுமானால், மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். மோடி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் 1979, 89, 91, 96 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட குழப்பநிலையே ஏற்படும். நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தரமுடியும்.
நிலையான ஆட்சி அமையாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். தில்லிவாழ் தமிழ் மக்கள் பிரதமர் மோடியின் பக்கமே உள்ளனர். தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் இத்தேர்தலில் பாஜகவை ஆதரிக்கின்றனர். ஏழை மக்களின் ஆதரவுடன் வரும் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்றார் அவர்.