மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது பாஜகவும் மரியாதை வைத்துள்ளது; அதற்காக அவரது அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் குறித்து பாஜக பேசாமல் இருக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.என்.எஸ். விராட் போர் கப்பலை ராஜீவ் காந்தி தனது குடும்பத்தினர் பயணம் செய்ய பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஐ.என்.எஸ். விராட் கப்பலை சோனியா காந்தி குடும்பத்தினர் தவறாக பயன்படுத்தியது தொடர்பான விவரம், இணையதளத்தில் நீண்டகாலமாகவே உள்ளது. இதுகுறித்து கடந்த 2013ஆம் ஆண்டில் 2 தேசிய செய்தி பத்திரிகைகளும் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.என்.எஸ். விராட் போர் கப்பல் ஊழியர்களே, அக்கப்பலில் ராஜீவ் காந்தி, அவரது குடும்பம், அவரது மனைவியின் குடும்பம் பயணித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றை சுயநல நோக்கத்துக்கு பயன்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட கட்சி, பாதுகாப்புப் படை விவகாரத்தை பாஜக அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுகிறது.
நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, பின்னர் தியாகி ஆகிவிட்டார். அவர் மீது பாஜக மரியாதை வைத்துள்ளது. இதற்காக அவரது அரசின் மோசமான நிர்வாகம், ஊழல், கொள்கைகள் குறித்து பாஜக பேசாமல் இருக்காது.
போபால் விஷ வாயு கசிவு விவகார முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்றது குறித்து எப்போதெல்லாம் பேசுகிறோமோ, அப்போதெல்லாம் ராஜீவ் காந்தி அரசு குறித்து பேச வேண்டியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வியெழுப்பினார் நிர்மலா சீதாராமன்.