17-வது மக்களவைத் தேர்தலின் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) 7 மாநிலங்களில், 59 தொகுதிகளில் நடைபெறுகிறது.
17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 6-ஆம் கட்டமாக நாளை 59 தொகுதிகளில் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் மற்றும் தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் மத்தியப் பிரதேசத்தில் குணா, போபால் உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், அலகாபாத், பிகாரில் கிழக்கு சாம்பரன், ஹரியாணாவில் ஹிஸார், சோனிபாத் மற்றும் ரோஹ்தக் ஆகிய தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, பிகாரில் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை வென்றது. ஹரியாணாவில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை வென்றது. ஜார்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8-இல் 7 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 14-இல் 12 தொகுதிகள், தில்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளையும், கடந்த முறை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.
மொத்த வேட்பாளர்கள்: 979
மொத்த வாக்காளர்கள்: 10.17 கோடி
மொத்த வாக்குச்சாவடி: 1.13 லட்சம்