இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு ஹவாலா முறையில் பாஜக பணம் வழங்குகிறது; இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகளும் ஏதும் செய்யாமல் அமைதியாக உள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், அசோக்நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது: தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்பு, இரவு நேரத்தில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பாஜகவின் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பின்னர், ஹவாலா முறையில், வாக்காளர்களுக்கு வாக்குக்காக அக்கட்சி பணம் வழங்குகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதனால் நாம் இதுகுறித்து கண்காணிக்க வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்துச் செல்வதாக பிடிபட்டார். ஆனால் அதற்காக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணத்தை எடுத்துச் செல்லவும், வாக்குக்காக மக்களிடம் பணம் வழங்கவும் ஒப்பந்ததாரர்களை பாஜக பணிக்கு அமர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்லும்போதெல்லாம், ஊடகத் துறையினர் யாரையும் அருகில் அனுமதிப்பதில்லை. ஏன் அவ்வாறு நடக்கிறது? என்றார் மம்தா.