மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.
இந்நிலையில், 6-ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ஹரியாணா (10), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), மேற்கு வங்கம் (8), தில்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்குக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 7 மணி நிலவரப்படி 61.14 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 80.16 சதவீதம், தில்லியில் 56.11 சதவீதம், ஹரியாணாவில் 62.91 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 53.37 சதவீதமும், பிகாரில் 59.29 சதவீதமும், ஜார்க்கண்ட்டில் 64.46 சதவீதமும், மத்தியப்பிரதேசத்தில் 60.40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இவர்களில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், கிருஷண் பால் குர்ஜார், ராவ் இந்தர்ஜித் சிங், ஹர்ஷவர்தன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது மகன் தேவேந்தர் சிங் ஹூடா, பாஜக மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
இவர்களைத் தவிர்த்து குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஆகியோரும் தேர்தல் களத்தில் உள்ளனர்.