17-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"நாடு முழுவதும் 110 தேர்தல் பிரசாரங்களில் பேசியுள்ளேன். மக்கள் மனநிலையை உணர்ந்ததன் அடிப்படையில் தெரிவிக்கிறேன், பாஜக கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெறுவதை மறுக்க முடியாது.
2014-இல் மக்கள் பிரதமர் மோடியை எதிர்பார்ப்புடன் பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு தற்போது நம்பிக்கையாக மாறியுள்ளது. இந்த அரசு சமூகத்தின் அனைத்து தரப்பிலும் களப்பணி ஆற்றியுள்ளது. இதன்மூலம், மக்கள் த்ருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவை பிரதமர் மோடியால் தான் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால், மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தர விரும்புகின்றனர்.
2014-இல், பிரதமர் மோடி மற்றும் மன்மோகன், சோனியா இடையே போட்டி நிலவியது. 2019-இல் மோடியுடன் யாருக்கு போட்டி. அது தெரியவில்லை" என்றார்.