பாரதிய ஜின்னா கட்சி: பாஜக குறித்து காங்கிரஸ் விமர்சனம்

பாஜகவை பாரதிய ஜின்னா கட்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  முகமது அலி ஜின்னா பிரதமராக நேரு அனுமதித்திருந்தால், இந்தியா-பாகிஸ்தான்
பாரதிய ஜின்னா கட்சி: பாஜக குறித்து காங்கிரஸ் விமர்சனம்


பாஜகவை பாரதிய ஜின்னா கட்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  முகமது அலி ஜின்னா பிரதமராக நேரு அனுமதித்திருந்தால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என்று பாஜக வேட்பாளர் ஒருவர் கூறியதை அடுத்து, காங்கிரஸ் இவ்வாறு விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம், ராணாபூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரட்லம்-ஜபுவா தொகுதி பாஜக வேட்பாளர் குமண் சிங் தோமர் கலந்து கொண்டு பேசுகையில், நாடு சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு பிடிவாதமாக இல்லாதிருந்தால், இந்த தேசம் பிரிவினையைச் சந்தித்திருக்காது என்றார். வழக்குரைஞராகவும், விஷயம் தெரிந்தவராகவும் இருந்த முகமது அலி ஜின்னாவை பிரதமராக்கியிருந்தால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்திருக்காது என்றும் தோமர் கூறியிருந்தார்.
அவரது கருத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் எண்ணம் அம்பலமாகி விட்டது. ஜின்னா, நாட்டின் முதல் பிரதரமாகியிருக்க வேண்டும் என்று தோமர் நினைக்கிறார். நேரு மீதான வெறுப்பு, ஜின்னா மீதான அன்பாக மாறியிருக்கலாம் அல்லது ஜின்னா மீதான அன்பு, நேரு மீதான வெறுப்பாக மாறியிருக்கலாம்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜின்னாவின் புகைப்படம் வைத்ததற்காக கொதித்தெழுந்தவர்கள், ஜின்னாவைப் புகழ்ந்த ஒருவருக்காக பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.
இவர்கள்தான் சுதந்திரத்துக்கு முன் ஃபஸ்லுல் ஹக்கின் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தார்கள். சிந்து மாகாணத்தில் இரு நாட்டுக் கொள்கைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அரசில் இருந்து ஹிந்து மகா சபை வெளியேறவில்லை.
தற்போது, ஜின்னாவை ஆதரித்த பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அழைத்தது ஏன்? அழைப்பு இல்லாமலேயே பாகிஸ்தானுக்கு மோடி சென்றது ஏன்?  மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்புவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது. ஏனெனில், இது பாரதிய ஜின்னா கட்சி.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் பேச வேண்டும். பாஜக வேட்பாளரின் கருத்து கண்டனத்துக்குரியது. அதற்காக, மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றார் பவன் கேரா.
மன்னிக்க முடியாத குற்றம்: இதனிடையே, பாலாகோட் தாக்குதலின்போது பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க மேகங்கள் உதவும் என்று ஆலோசனை வழங்கியதன் மூலம் பிரதமர் மோடி மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் ராணுவத்தின் வலிமையை வேறு எந்தப் பிரதமரும் கேலிக் கூத்தாக்கியதில்லை. ராணுவத்தின் பெயரைச் சொல்லி வாக்குகளைப் பெறும் அவர், கடைசியில் படைகளை அவமதித்துள்ளார். அவர் தனது தற்பெருமையைப் பேசும்போது போர்த் தந்திரங்களை அவமதித்து, மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்துள்ளார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com