மம்தாவின் மார்பிங் படத்தை வெளியிட்ட பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் படத்தை கணினி மூலம் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் பெண் நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிபந்தனை


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் படத்தை கணினி மூலம் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் பெண் நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மம்தாவின் முகத்தை போட்டோஷாப் மென்பொருள் உதவியுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டதாக பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் நிர்வாகி பிரியங்கா ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மே 10-ஆம் தேதி மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்
பட்டார். 
பிரியங்கா ஷர்மா மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு  வந்தது. 
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
பேச்சுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது, பேரத்துக்கு உட்படாதது. இருந்தபோதிலும், மற்றவர்களின் உரிமைகளை எங்கே மீறுவதாக அமைகிறதோ அங்கே உங்களின் பேச்சுரிமையின் சுதந்திரம் முடிவடைகிறது. 
எனவே, பிரியங்கா ஷர்மா சிறையிலிருந்து வெளிவரும்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றனர்.
பிரியங்கா ஷர்மா மீதான மேற்கு வங்க காவல்துறையினரின் கைது நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி, பாஜகவும், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com