ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது நபரின் வயிற்றிலிருந்த 116 இரும்பு ஆணிகளை கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் அனில் சைனி கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலம் பூண்டி பகுதியைச் சேர்ந்த போலா சங்கர் வயிற்றில் வலி இருப்பதாக கூறி கடந்த சில நாள்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி அதிகமானதைத் தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் காணப்பட்ட பொருள்களை பார்த்தவுடன் மருத்துவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. இதையடுத்து, சங்கருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டு அவரது வயிற்றின் உள்ளே சில பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது அவரின் வயிற்றிலிருந்த 116 இரும்பு ஆணிகள், நீண்ட வயர், இரும்பு குண்டுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. பெரும்பாலான ஆணிகள் 6.5 செ.மீ. நீளம் கொண்டவையாக இருந்தன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி இயல்பான நிலையிலேயே உள்ளார்.
போலா சங்கர் தோட்டக்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவ்வளவு அதிகமான இரும்பு பொருள்களை அவர் எப்படி விழுங்கினார் என்பது அவரின் குடும்பத்தாருக்கே தெரியவில்லை என்றார் அவர்.
இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டில் பத்ரிலால் என்பவரது வயிற்றில் இருந்து 150 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.