மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கர்நாடகத்தில் மகத்தான மாற்றம் நிகழும் என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கலபுர்கி மாவட்டம், சின்சோலி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால், அக் கட்சிகளின் எம்எல்ஏ க்கள் 20 பேர், பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மாநிலத்தில் மகத்தான மாற்றம் நிகழ உள்ளது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், ஆட்சியைப் பிடிக்காமல் வேடிக்கை பார்க்க நாங்கள் ஒன்றும் சந்நியாசிகள் அல்ல. சின்சோலி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முதல்வர் குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது பரிவு உள்ளது போல பேசியுள்ளார். அவருக்கு உண்மையாகவே மல்லிகார்ஜுன கார்கே மீது பரிவும், அன்பும் இருந்தால், தான் வகிக்கும் முதல்வர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்கட்டும். சின்சோலி, குந்தகோலா தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர்.
இதன்மூலம், பாஜகவின் பலம் உயர்வதால், மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. பாஜக ஆட்சியைப் பிடித்தால் வீரசைவர்-லிங்காயத்து சமுதாய மக்களிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அளவில் 280 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.