புது தில்லி: கோட்ஸே குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது, பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது.
போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குரிடம் வியாழனன்று செய்தியாளர்கள், கோட்ஸே குறித்த கமலின் கருத்து குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். பிரக்யாவின் கருத்தைத் தொடந்து பாஜகவின் ஆனந்த் ஹெக்டே, நளின் குமார் கடில் ஆகியோரும் இதே பொருளில் கருத்துகளைக் கூறி, ப்ரக்யாவுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால் ப்ரக்யாவின் கருத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோட்ஸே குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது, பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பிரக்யா சிங் தாகுர், ஆனந்த் ஹெக்டே மற்றும் நளின் குமார் கடில் ஆகிய மூவரது கருத்துக்களும் அவர்களது சொந்த கருத்துக்களே. அதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவர்கள் தங்கள் கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள். ஆனாலும் பாஜக அவர்களது கருத்துக்களை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட மூன்று தலைவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் அந்த குழுவானது 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.