செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி என்று பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட பிரசாரம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை.
இந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்த்தார்.
அதற்கான காரணத்தை விளக்கிய பிரதமர் மோடி, "இந்த செய்தியாளர் சந்திப்பை கட்சியின் தலைவர் அமித் ஷா தான் நடத்துகிறார். பாஜகவில் ஒழுக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையடுத்து, இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,
"வாழ்த்துகள் மோடிஜி. சிறப்பான செய்தியாளர் சந்திப்பு! செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி. அடுத்த முறை, ஓரிரு கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க அமித் ஷா அனுமதிக்கட்டும்" என்றார்.