முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல் நானும் பாதுகாப்பு அதிகாரிகளால் படுகொலை செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதையொட்டி பிரசாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப்புக்கு சென்றிருந்தார்.
அப்போது, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால்,
"இந்திரா காந்தியை போல், எனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியால் பாஜக என்னை ஒரு நாள் படுகொலை செய்யும். எனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அவர்கள் (பாஜக) என்னை ஒரு நாள் கொலை செய்வார்கள்" என்றார்.
அண்மையில், அரவிந்த் கேஜரிவால் தில்லி மோடி நகரில் பேரணி மேற்கொண்ட போது, ஒரு நபர் பிரசார வாகனத்தின் மேல் ஏறி கேஜரிவாலை அறைந்தார். அந்த நபரை பிடித்து கைது செய்து விசாரித்த தில்லி போலீஸார், அவர் அதிருப்தி ஆம் ஆத்மி நிர்வாகி என்று தெரிவித்தனர். ஆனால், ஆம் ஆத்மி கட்சி இந்த தாக்குதலுக்கு பாஜகவை குற்றம்சாட்டியது.