புது தில்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நாடு முழுவதும் 1.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி பயணம் செய்தார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி 1.5 லட்சம் கி.மீ. பயணம் செய்து 142 பொதுக் கூட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். சுதந்திரம் கிடைத்த பிறகு, இவ்வளவு தொலைவுக்கு பயணம் செய்து இத்தனை பொதுக் கூட்டங்களில் வேறு எந்த தலைவரும் பேசியதில்லை. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் பிரசாரம் செய்தார்.
மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளார். பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா.