தேர்தல் ஆணைய கூட்டங்களைப் புறக்கணிக்க அசோக் லவாசா முடிவு?-தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் கூட்டங்களில் அதன் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள்
தேர்தல் ஆணைய கூட்டங்களைப் புறக்கணிக்க அசோக் லவாசா முடிவு?-தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்


புது தில்லி: தேர்தல் ஆணையத்தின் கூட்டங்களில் அதன் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையானது என்றும், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை அண்மையில் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது. இதற்குத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கு லவாசா கடந்த 4-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தேர்தல் நடத்தை நெறிமீறல்கள் தொடர்பாக நடைபெறும் கூட்டங்களில் அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இதுதொடர்பாக இனி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து லவாசாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "இது தேர்தல் ஆணையத்தின் உள்விவகாரம் தொடர்புடையது. எனவே, எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.

கருத்து வேறுபாடுகள் அவசியம்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுனில் அரோரா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் ஆணையர்கள் மூவரும் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். 

இதுபோன்று கடந்த காலங்களிலும் பலமுறை ஏற்பட்டுள்ளது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதும் அவசியமே. அது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் புத்தகம் ஒன்றையே எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட முடியவில்லை எனில், பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். 

இதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களிலும் முடிவெடுக்கப்பட்டது. 

தவிர்க்கப்படவேண்டியவை: தேர்தல் ஆணையத்தின் கூட்டங்களில் அசோக் லவாசா பங்கேற்கமாட்டார் என்று வெளியான தகவல்கள் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துபவை; அவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியவை. 

மக்களவைத் தேர்தலில் எழும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு ஒன்றை அமைக்க கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 21-ஆம் தேதி தேர்தல் ஆணையர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com