ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதர்வா பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதற்றம் நீடிப்பதால் 4ஆவது நாளாக அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, நயீம் ஷா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் பசுப் பாதுகாவலர்கள் இருப்பதாக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தோடா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக தோடா காவல் துறை துணை ஆணையர் சாகர் டய்ஃபோட் கூறியதாவது:
கச்சி நல்தி கிராமத்தில் நடந்த வன்முறையில் உள்ளூர்வாசிகள் இல்லாமல் வெளியூரைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 4ஆவது நாளாக சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது. சிஆர்பிஎஃப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் கோட்டாட்சியர் 7 நாள்களுக்குள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை நேரிட்ட பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார் அவர்.