நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்காக, பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்கு கணிப்புகளுடன் ஒப்பிட்டு, நடிகர் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தம்முடன் ஐஸ்வர்யா ராய் எடுத்த புகைப்படம், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய், சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதில் கருத்து கணிப்பு, வாக்கு கணிப்பு, தேர்தல் முடிவு என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐஸ்வர்யா ராயின் கடந்தகால வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில், விவேக் ஓபராய் இந்த பதிவை வெளியிட்டதாக கூறப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. சுட்டுரை சமூகவலைதளத்திலும், பிற சமூகவலைதளங்களிலும் விவேக் ஓபராய்க்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில், விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
இதனிடையே, சுட்டுரையில் தாம் வெளியிட்ட பதிவு தேவையில்லாமல் அரசியலாக்கப்படுவதாக விவேக் ஓபராய் குற்றம்சாட்டியுள்ளார்.