தனது வலது கையாக செயல்பட்டு வந்த ராம்வீர் உபாத்யாய்-ஐ பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
முன்னாள் அமைச்சராக இருந்த ராம்வீர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் இருந்து வந்தார். அதிலிருந்தும் நீக்குவதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அலிகார், ஃபாதேபூர், சிக்ரி மற்றும் ஹத்ராஸ் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக உறுப்பினர்களை ஆதரித்து ராம்வீர் செயல்பட்டதாக, பகுஜன் சமாஜ் பொதுச் செயலாளர் மேவா லால் கௌதம் அக்கட்சித் தலைவர் மாயாவதிக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பினார். இதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சதாபாத் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக மட்டும் ராம்வீர் தொடர்வார். இச்சம்பவம் உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.