கங்கையில் சிறுதுளி மாசு கலந்தாலும், அது தொடர்பாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) தெரிவித்துள்ளது.
கங்கை நதி மாசுபடுவது தொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கங்கை நதி மாசுபாட்டைத் தடுப்பதற்கு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எந்த செயல்திட்டமும் வகுக்கவில்லை. கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் விவரங்களை தேசிய கங்கை தூய்மை குழு முறையாகத் தெரிவிக்கவில்லை. இவற்றின் மூலம் என்ஜிடியின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெரிகிறது. மாநிலங்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
கங்கையில் சிறுதுளி மாசு கலந்தாலும், அது தொடர்பாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கை நதி பாயும் மாநிலங்கள், நதி நீரின் தூய்மைத்தன்மை அளவை தங்களது அரசு வலைதளத்தில் மாதந்தோறும் வெளியிட வேண்டும்.
நதிக்கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.