திரிபுராவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, திரிபுரா பூர்வகுடிகள் முன்னணி (ஐபிஎஃப்டி) கட்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிமாவேலி பேரவைத் தொகுதி எம்எல்ஏவான தனஞ்செய்க்கு எதிராக, அகர்தலா மகளிர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதில், தனக்கும் தனஞ்செய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், இதையடுத்து தன்னுடன் அவர் நெருங்கிய உறவு வைத்திருந்தாகவும் கூறியுள்ளார். ஆனால், இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் தனஞ்செய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டை எம்எல்ஏ தனஞ்செய் மறுத்துள்ளார். தனது நற்பெயரைக் கெடுக்க அரசியல் எதிரிகள் சதி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். திரிபுராவில் ஆளும் பாஜக கூட்டணியில் திரிபுரா பூர்வகுடிகள் முன்னணி கட்சி அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.