வாக்குக் கணிப்பு இறுதி முடிவல்ல; எனினும் பாஜகவே வெல்லும்: கட்கரி

தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவுகள் என்பது இறுதி முடிவல்ல, எனினும் தேர்தலில் பாஜகவே வெல்லும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நாகபுரியில் திங்கள்கிழமை 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்பட போஸ்டரை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  உடன் அப்படத்தில் பிரதமரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் ஓபராய் (இடது).
நாகபுரியில் திங்கள்கிழமை 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்பட போஸ்டரை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  உடன் அப்படத்தில் பிரதமரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் ஓபராய் (இடது).

தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவுகள் என்பது இறுதி முடிவல்ல, எனினும் தேர்தலில் பாஜகவே வெல்லும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன. 
இது பாஜக தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குக் கணிப்பில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளனர்.
இதனிடையே நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள "பிஎம் நரேந்திர மோடி' திரைப்பட போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சியில் கட்கரி பங்கேற்றார். அவரிடம் வாக்குக் கணிப்பு முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்:
தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவுகள் என்பது இறுதி முடிவாகிவிடாது. எனினும், இந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்பது முன்பே தெரிந்த விஷயம்தான். எனவே, இப்போதைய வாக்குக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் நீங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நான் 50 முறைக்கு மேல் விளக்கமளித்துவிட்டேன். நாங்கள் மோடியின் தலைமையில்தான் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். எனவே, மோடியின் தலைமையில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு அமையும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மோடியை மீண்டும் பிரதமராக்கவும், பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்' என்று கட்கரி பதிலளித்தார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக எத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, "கடந்த தேர்தலில் மகாராஷ்டிரத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக வென்றதோ, அதே அளவிலான தொகுதிகள் இப்போதும் கிடைக்கும்' என்று பதிலளித்தார்.
மகாராஷ்டிரத்தில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த தேர்தலில் பாஜக 23 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 18 இடங்களிலும் வெற்றி பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com