அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது, எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அன்று வெளியானது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியே பெரும்பான்மையை பெறும் என்று கணித்தன.
இதைத்தொடர்ந்து, வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறை தொடர்பாக தொடக்கம் முதலே பல கோரிக்கைகளை எழுப்பி வந்த எதிர்க்கட்சிகள் நேற்று தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று முறையிட்டனர். அவர்கள், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டையே எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், 22 எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளுக்கு தனது டிவிட்டர் பதிவில் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
"அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பிரசாரங்களால் மனமுடைந்துவிட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடின உழைப்பு வீண் போகாது. ஜெய்ஹிந்த்!" என்றார்.