தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதுகுறித்து கலபுர்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, கலபுர்கி தொகுதியில் எனது வெற்றி உறுதியாகியுள்ளது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் கலபுர்கி உள்பட பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேதான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என சந்தேகம் எழுகிறது.
கலபுர்கி தொகுதியில் நான் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதன் காரணமாக மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தலில் ஆசீர்வாதம் செய்துள்ளனர். ஆனால், எனது தொகுதியில் நான் தோல்வி அடைவேன் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.
பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனக் கூறி வருகிறார். அவரின் இந்த உறுதியான பேச்சால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்ற சந்தேகத்தை மேலும் உண்மையாக்கி வருகிறது. பிரதமர் மோடி அதிக அளவிலான பேரணியை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறினர். ஆனாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாஜகவினருக்கு தேர்தல் ஆணையம் உதவி செய்து, ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் நாளில் பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலில் யோகாவில் அமர்ந்து வாக்காளர்களைக் கவர்ந்தது, விதிமுறைகளை மீறிய செயலாகும். இதைத் தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என்றார்.