பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சித் தலைவரும் மாயாவதிக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவருமான ராம்வீர் உபாத்யாயா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாயாவதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் பொதுச் செயலாளர் மேவாலால் கெளதம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராம்வீர் உபாத்யாயா இப்போது முதல் நீக்கப்படுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் கொறாடா பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் ஆக்ரா, ஃபதேபூர்சிக்ரி, அலிகர் உள்ளிட்ட தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், எதிரணியுடன் இணைந்து செயல்பட்டார். எனவே, கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சியினர் யாரும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், அவர் எம்எல்ஏவாகத் தொடர்வார் என்று தெரிகிறது. முன்பு உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான அரசில் அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார்.
முன்னதாக ஃபதேபூர்சிக்ரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட தனது மனைவிக்கு ராம்வீர் வாய்ப்பு கேட்டார். அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாததை அடுத்து, வெளிப்படையாகவே மாநில பாஜக தலைவர்களுடன் ராம்வீர் இணைந்து செயல்படத் தொடங்கினார்.