2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் முற்பகல் 11.20 மணி நிலவரப்படி பாஜக 323 தொகுதிகளிலும், காங்கிரஸ் 107 தொகுதிகளிலும், 3வது அணி 112 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம், மத்தியில் பாஜக தலைமையில் மோடி அரசு அமைவது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மையோடு பாஜக மீண்டும் ஆட்சியமைக்க இந்திய மக்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 20 ஆயிரம் பாஜக தொண்டர்கள் இன்று மாலை புது தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று கட்சி அலுவலகத்துக்கு வரும் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகவே 20 ஆயிரம் பாஜக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் அனைவரும் மே 25ம் தேதி தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.