தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
தென்சீனக் கடலில் கடந்த 16ஆம் தேதி முதல் இந்த பயிற்சி நடைபெற்று வந்தது. இந்த பயிற்சிக்கு, சிம்பக்ஸ்-2019 என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்பயிற்சியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சக்தி, இந்திய கடலோர பாதுகாப்புப் படை பி-81 விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. சிங்கப்பூர் கடற்படை தரப்பில் ஸ்டெட்பாஸ்ட், வேலியன்ட் ஆகிய போர் கப்பல்கள், எப்-16, எப்-50 ரக போர் விமானங்கள் பங்கெடுத்தன.
இருநாடுகளின் கடற்படை கப்பல்களும், சிங்கப்பூருக்கு சொந்தமான கடற்பகுதியிலேயே பெரும்பாலான பயிற்சியை நடத்தியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தென்சீனக் கடல்பகுதி முழுவதையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோல், தென்சீனக் கடல் பகுதிக்கு வியத்நாம், பிலிப்பின்ஸ், தைவான், மலேசியா, புருனே, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இதனால் சீனாவுக்கும் மேற்கண்ட நாடுகளுக்கும் இடையே தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் கூட்டு பயிற்சி நடத்தியுள்ளன.